கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கீழவீதியில் மங்கேஷ்குமார்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சுபாங்கி(46) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷாம் என்ற மகனும், சோனா, மோனா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

நேற்று அதிகாலை சுபாங்கி தனது உறவினர் நாம் தேவ் என்பவருடன் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் சிதம்பரத்திலிருந்து காரை பிச்சாவரம் நோக்கி ஓட்டி சென்றார். பின்னர் அங்கிருந்து சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் எட்டுகண் மதகுபாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி உப்பனாற்றில் பாய்ந்தது. அவருடன் இருந்த உறவினர் நாம் தேவ் போராடி காரின் கதவை திறந்து வெளியே வந்து உயிர் தப்பினார். ஆனால் வெளியே வர முடியாமல் காருடன் தண்ணீரில் மூழ்கி சுபாங்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு காருடன் சுபாங்கியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.