பஞ்சாப் மாநிலம் தர்ன் தரண் பகுதியில் நடந்த ஒரு திருமண விழாவில், மணமகள் ஒரே இடத்தில் நிற்க, அவர் மீது மூட்டை மூட்டையாகப் பணத்தை அள்ளி வீசும் வீடியோ இப்போது எக்ஸ் (X) தளத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்தப் பெண்ணைச் சுற்றி உறவினர்கள் கூடி நின்று, கையில் வைத்திருக்கும் பைகளில் இருந்து ரூபாய் நோட்டுகளை அள்ளி அள்ளி அவர் தலைக்கு மேலேயே கொட்டுகின்றனர். அந்தப் பொண்ணு ஒரு சிலையாக நிற்க, அவர் மீது ரூபாய் நோட்டுகள் மழையாகப் பொழியும் இந்தக் காட்சி பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது.

​இந்த வீடியோவில் வீசப்படும் அனைத்து நோட்டுகளும் 10 ரூபாய் தாள்கள் என்றும், மொத்தம் 40,000 நோட்டுகள் இப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மொத்தம் 4 லட்சம் ரூபாய் பணத்தை இப்படி மணமகள் மீது கொட்டித் தீர்த்துள்ளனர். பஞ்சாபி ஸ்டைல் திருமணங்களில் இது போன்ற பிரம்மாண்டங்கள் வழக்கம் என்றாலும், 4 லட்சம் ரூபாயைச் சில்லறையாக மாற்றி இப்படி மணமகளின் மீது கொட்டியது தான் இப்போது இணையத்தின் டாப் விவாதமாக மாறியுள்ளது.