பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்த கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்..

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியில் இருக்கும் போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் சுற்றறிக்கைகள் மூலம் அறிவுறுத்தியிருந்தனர். இதை வலியுறுத்தி, இன்றும் (03.07.2023) ஒரு சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் சென்னை பெருநகர காவல் துறையின் ஆணையாளர் திரு. சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் பாதுகாப்பு பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்து பணியில் இருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனை பயன்படுத்துவதால் அவர்களால் பணியை சரியாக செய்ய முடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது என்றும், கவனச் சிதறலால் பல முக்கிய பணிகளில் தொய்வு ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டு குறிப்பாக, சட்டம் & ஒழுங்கு, பாதுகாப்பு பணி, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணி, கோவில் மற்றும் திருவிழாக்கள் பாதுகாப்பு பணிகளின் போது கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக்கூடாது என்பதை பணியை நியமிக்கும் போதும் பணியை பற்றி விவரிக்கும் போதும் காவல் ஆளிநர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற மிக முக்கியமான பணிகளில் ஈடுபடும் காவலர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து போக்குவரத்தை சரி செய்வதும், போக்குவரத்து விதிமீறல்களை உடனுக்குடன் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் மிக முக்கியமானது என்பதால் இச்சமயங்களில், செல்போனை பயன்படுத்துவது காவல் ஆளிநர்களின் கவனத்தை திசை திருப்புகிறது. எனவே போக்குவரத்தை சரி செய்தல் மற்றும் விதி மீறல்களை கண்டறிதலில் தொய்வு ஏற்படும் என்பதை உணர்ந்து காவலர்கள் பணி நேரங்களில் கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக் கூடாது எனவும் காவல் ஆணையாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்..

மிக மிக முக்கிய நபர்களின் பாதுகாப்பு முக்கிய போராட்டங்கள் இவ்வாறான முக்கிய பணிகளின் போது காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கீழ் உள்ள ஆளுநர்கள் செல்போனை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது. எனவே அனைத்து கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் ஆகியோர் அவரவர்களின் கீழ் பணி புரியும் காவல் ஆளிநர்கள் இந்த அறிவுறுத்தல்களை எந்தவித சுணக்கமும் இன்றி மிக கண்டிப்புடன் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மேலும் இதை அனைத்து காவல் நிலைய தகவல் பலகைகளிலும் ஒட்டியும் தினமும் காலை ஆஜர் அணிவகுப்பின்போது இதை படித்துக் காட்டியும் இந்த அறிவுரையை கண்டிப்பாக பின்பற்ற வலியுறுத்த வேண்டும் என காவல் ஆணையாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.