ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என சமூக வலைதளங்களில் பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

நெதன்யாகு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் அந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து ‘X’ தளத்தில் ஆயிரக்கணக்கான பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். போர்க்காலத்தில் தலைவர்கள் நேரலையில் தோன்றாமல், தொழில்நுட்ப உதவியுடன் போலியான வீடியோக்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் புகார்கள் இந்த விவாதத்தின் மையமாக உள்ளன.

இந்த வீடியோவை பிரேம் வாரியாக ஆய்வு செய்த நெட்டிசன்கள், சில அதிர்ச்சிகரமான ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். அதாவது நெதன்யாகு மைக்ரோஃபோன் அருகே கையை அசைத்துப் பேசும் போது, அவரது கையில் ஐந்து விரல்களுக்குப் பதிலாக ஆறு விரல்கள் தெரிவதாகக் கூறி ஸ்கிரீன்ஷாட்கள் வைரலாகி வருகின்றன.

பொதுவாக AI மூலம் உருவாக்கப்படும் மனித உருவங்களில் கைகள் மற்றும் விரல்களைத் துல்லியமாக வடிவமைப்பதில் சிக்கல்கள் ஏற்படும். இந்த ‘டிஜிட்டல் குளறுபடி’  நெதன்யாகுவின் வீடியோவிலும் தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வீடியோவை மெதுவாக்கிப் (Slow motion) பார்க்கும் போது, உடல் அசைவுகளுக்கும் பின்னணிக்கும் இடையே சில முரண்பாடுகள் இருப்பதாகவும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், இத்தகைய வீடியோக்கள் வெளியாவது திட்டமிட்ட ஒரு டிஜிட்டல் பிரச்சாரமாக இருக்கலாம் எனச் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. “தலைவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு, தாங்கள் களத்தில் இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்க இத்தகைய ‘சிந்தெடிக்’ (Synthetic) வீடியோக்கள் பயன்படுத்தப்படலாம்” என சில அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதற்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை. கேமரா கோணம் அல்லது ஒளியின் பிரதிபலிப்பு காரணமாகக் கூட விரல்கள் அவ்வாறு தெரிந்திருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். எது எப்படியோ, போர்க்களத்தில் நடக்கும் மோதலுக்கு இணையாக இணையத்திலும் ‘டிஜிட்டல் போர்’ தீவிரமடைந்துள்ளது என்பது மட்டும் நிதர்சனம். மேலும் முன்னதாக இஸ்ரேல் அதிபர் மாளிகை மீது ஈரான் நடத்திய தாக்குதலில் நெதன்யாகு உயிர் தப்பியதாக கூறப்படும் நிலையில் இந்த ஏஐ வீடியோ புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.