விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் தாலுகா கன்னலம் கிராமத்தில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் அன்பரசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அந்த நம்பர் தனியா நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டு, கடன் தேவை என்றால் உங்களது விவரங்களை அனுப்பி வையுங்கள் என தெரிவித்தார். இதனை நம்பி அன்பரசன் தனது விவரங்களை அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து 5 லட்ச ரூபாய் கடன் தருவதாகவும், குறைந்தபட்சம் உங்களது வங்கி கணக்கில் 50 ஆயிரம் ரூபாய் இருப்பு இருக்க வேண்டும் எனவும் அந்த நபர் தெரிவித்தார். இதனை நம்பி அன்பரசன் சிலரிடம் இருந்து கடனாக வாங்கி 5௦ ஆயிரம் ரூபாய் பணத்தை தனது வங்கியில் டெபாசிட் செய்து அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்த மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து அன்பரசனை தொடர்பு கொண்ட மர்ம நபர் 10 நிமிடத்தில் கடன் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்து, ஏ.டி.எம் அட்டையின் காலாவதி ஆகும் தேதி, ரகசிய எண், ஒடிபி ஆகியவற்றைக் கேட்டு க்கொண்டார். சிறிது நேரத்தில் அன்பரசனின் வங்கி கணக்கில் இருந்து 49 ஆயிரத்து 898 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து அன்பரசன் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.