சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜூனோ, வருவாய் கோட்டாட்சியர்கள் சுஜிதா பால்துரை, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் அழகுமலை, வேளாண்மை துறை இணை இயக்குனர் தனபாலன் மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

தேவகோட்டை, கல்லல், சாக்கோட்டை வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் விரிவாக விளக்கியுள்ளனர். இதில் கலெக்டர் கூறியதாவது, நீர்வள ஆதாரங்களை வளப்படுத்துவதற்கு என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீர் வள  ஆதாரத்துறை சார்பாக 150 கண்மாய்களில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 241 கண்மாய்களில் பணிகளை மேற்கொள்ள அதற்கான முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டிலும் 300 கன்மாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

இது மட்டுமல்லாமல் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களையும் மேம்படுத்துவதற்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நில அளவை துறை விவசாயிகள் கூறும் அளவீட்டு பணிகளை வரைந்து மேற்கொள்ளவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், விவசாயிகளுக்கு மின்விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், வங்கிகள் மூலமாக கடன் உதவி வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில்கள் தொடங்க உறுதுணையாக இருந்திடவும், கடனுக்குரிய மானிய தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கிடவும், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதன் பின் உழவர் இதழினை கலெக்டர் வெளியிட்டுள்ளார்.