லக்னோவில் நடந்த ஒரு துயரமான சம்பவம் பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன், தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த 13 லட்சம் ரூபாயை ஆன்லைன் விளையாட்டான ஃப்ரீ ஃபயர் மூலம் செலவு செய்துவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்டான். மாணவனின் தந்தை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலம் விற்று சேமித்த பணத்தை வங்கியில் வைத்திருந்தார். ஆனால், திங்கட்கிழமை அவர் வங்கி பாஸ்புக்கை புதுப்பிக்க சென்றபோது, கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்தது. இது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்ஃபோன் கொடுக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
பெற்றோர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோனை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, வங்கிக் கணக்கு மற்றும் UPI பரிவர்த்தனைகளுக்கு வரம்பு அமைப்பது முக்கியம். வங்கி ஆப்கள் மற்றும் UPI ஆப்களுக்கு வலுவான கடவுச்சொல் அல்லது கைரேகை/முக அடையாள பூட்டு (பயோமெட்ரிக் லாக்) பயன்படுத்த வேண்டும். ஆட்டோ-சேவ் கடவுச்சொல் வசதியை முடக்கி, கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் பர்ச்சேஸ் செய்ய பயோமெட்ரிக் உறுதிப்படுத்தலை இயக்க வேண்டும். மேலும், பிளே ஸ்டோரில் உள்ள பெற்றோர் கட்டுப்பாடு (Parental Control) வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம்.
