அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக செயல்பட்டு வருவதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது தனித்தனி வேட்பாளர்களை அறிவிக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சசிகலா தான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடங்க விடமாட்டேன் என்று தற்போது கூறியுள்ளார். இது குறித்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரகோட்டை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியதாவது, தலைவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் எப்போதும் தொண்டர்களின் ஒப்புதலோடு தான் எதையும் செய்ய வேண்டும்.

நாம் அவர்களால் தான் தற்போது மேடையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம். ஆனால் அதிமுகவில் தற்போது அது போன்ற ஒரு சூழ்நிலை இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பாஜக வாசலில் நின்று காத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் அதிமுக தொண்டர்களின் இயக்கம். தொண்டர்களின் ஆதரவை பெற்றவர்களுக்கு இது போன்ற நிலை ஏற்படாது. அதிமுகவில் எப்போதும் தொண்டர்களின் நிலைப்பாடோடு று தான் முடிவு எடுக்கப்படும். 1,3 பேர் சேர்ந்து முடிவெடுக்க முடியாது.

அதுபோன்று முடிவெடுக்கக்கூடிய கட்சி திமுக. ஏனெனில் திமுகவில் குடும்ப உறுப்பினர்கள். அதிமுக மிகப்பெரிய குடும்பம் என்பதால் அது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும். நான் விரைவில் அதிமுகவை என்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவேன். நான் ஒரு சிலரை எடை போட்டுக் கொண்டிருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒன்றிணைத்து என்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன். மேலும் நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை ஒருபோதும் முடங்க விட மாட்டேன் என்று கூறியுள்ளார்.