நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துமீறலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேர் பிடிபட்ட நிலையில் மேலும் இருவரை காவல்துறை தேடுகிறது. குருகிராமில் தங்கி இருந்த 6 பேரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. கைதான 4 பேரிடமிருந்தும் செல்போன் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவைக்குள் கண்ணீர் புகை குப்பி வீசிய நபர்களால் மக்களவையில் புகை சூழ்ந்தது. புகை சூழ்ந்ததை தொடர்ந்து மக்களவையில் இருந்து எம்பிக்கள் அவசர அவசரமாக வெளியேறினர். பார்வையாளர்களாக வந்த 2 பேர் கண்ணீர் புகை குப்பியை வீசியுள்ளனர். சபாநாயகரை நோக்கி ஓடி வந்த நபரை சிவசேனா எம்பி அரவிந்த் உள்ளிட்டோர் மடக்கி பிடித்துள்ளார். பின் பாதுகாவலர்கள் இருவரையும் பிடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற மக்களவையில்  சாஹர் என்பவர் கண்ணீர் புகை குப்பிகளை வீசியது தெரிந்தது. மேலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதையடுத்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. நீலம், அமோல் ஷிண்டே , சாஹர் என 4 பேரை டெல்லி போலீஸ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பாஜக எம்பியின் பரிந்துரை கடிதத்தை கொண்டே இருவரும் உள்ளே நுழைந்தனர் என டேனிஷ் அலி எம்பி தகவல் தெரிவித்துள்ளார். மைசூர் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் கடிதத்தை காட்டி இருவரும் நுழைந்ததாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்ததாக கைதான 2 பேரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாடாளுமன்றத்திலும் விசாரணையை தொடங்கினர். என்.ஐஏ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்த வழக்கை விசாரிக்கும் என டெல்லி காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்தது.