கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மதுசூதன் ஆதிரா தம்பதி. இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் மற்றும் ஐந்து வயதில் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் இந்த தம்பதி குழந்தைகள் இருவரையும் அவர்களது பெரியம்மா தீப்தி தாஸ் வீட்டில் விட்டுவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளின் பாட்டியை பார்ப்பதற்காக சென்றிருந்தனர்.

பின்னர் மருத்துவமனையில் இருந்து திரும்பியதும் குழந்தைகளை அழைத்து வருவதற்காக ஆதிரா தீப்தி தாஸ் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. வெகு நேரம் கழித்து தம்பதியின் ஐந்து வயது மகள் வந்து கதவைத் திறக்க வீட்டிற்குள் சென்று பார்த்த ஆதிராவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தம்பதியின் மகன் சுயநினைவு இல்லாமல் தரையில் கிடக்க தீப்தி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்தவர்கள் தீப்தி தாஸை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்ததோடு சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தீப்தி தாஸ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.