ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத் ஸ்மாரக் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தின் போது, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் (NEET) தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இந்த அமைதிப் போராட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்பதற்காக அபிஜீத் திப்கே வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் அவரை தங்களது தோள்களில் தூக்கிக் கொண்டு உற்சாகமாக மேடையை நோக்கி அழைத்துச் சென்றனர். அப்போது கூட்டத்தில் புகுந்த சில சமூக விரோதிகள், திடீரென அபிஜீத்தின் கழுத்திலிருந்த ஸ்கார்ஃபைஇழுத்து, அவரது கன்னத்தில் சரமாரியாக அறைந்தனர். மேலும் அவரை கீழே தள்ளவும் முயன்றனர். இதனால் சம்பவ இடத்தில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. உடனடியாகச் செயல்பட்ட அவரது ஆதரவாளர்கள், தாக்குதல் நடத்தியவர்களைப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தலையிட்டு, தாக்குதல் நடத்திய இரண்டு இளைஞர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.