பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று (9.1.2024) சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ‘விழுதுகள்’ அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு தொடக்க விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துரையை மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வாசித்தார்.

வணக்கம், “தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாகத் திகழ்வதற்கு மிக முக்கிய காரணம் கல்வியே. அத்தகைய கல்வியை அனைவருக்குமானதாக மாற்றிய பெருமை நம் அரசு பள்ளிகளையே சாரும்.

தொடக்கக் காலகட்டம் முதல், இன்றைய நாள் வரை அரசு பள்ளிகளே அனைவருக்குமான கல்வியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சிறப்புக்குரிய அரசுப் பள்ளிகளில் படித்து இன்றைக்கு வாழ்க்கையிலும், பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி, பல உயரங்களை எட்டியிருக்கிற, உங்கள் எல்லோரையும் மனதார வாழ்த்துகிறேன்.

நாம் படித்த பள்ளிக்காக, நாம் எல்லோரும் திரும்ப, ஓரிடத்தில் ஒன்றுகூடி இருக்கிறோம் என்பது மிகவும் முக்கியமான தருணம். இப்போது முதல் நாம் படித்த அந்த அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஊக்கமாகவும், அந்தந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு நாம் உறுதுணையாகவும் இருப்பதோடு, அந்த பள்ளிக்கும் ஊருக்கும் இணைப்பை ஏற்படுத்துகிற, இணைப்பு பாலமாகவும், நாம் எல்லோரும் இருக்க வேண்டும்.

‘நம் பள்ளி, நம் பெருமை’ என்கிற முழக்கத்திற்கு முன்னாள் மாணவர்களாகிய நீங்கள் தான் சொந்தக்காரர்கள். நீங்கள் தான் ‘விழுதுகள்’. விழுதுகளாகிய நீங்கள் எல்லாம், ஒன்று சேர்ந்து ‘நம் பள்ளி நம் பெருமை’ என்ற கூற்றை நிலை நிறுத்த வேண்டும். அதற்கு நாம் அனைவரும் பள்ளி மேலாண்மைக் குழுவோடு இணைந்து நம் பள்ளியின் மேம்பாட்டிற்காக செயலாற்ற வேண்டும்.

விழுதுகளாகிய ஒவ்வொருவரும் நம்முடைய அரசு பள்ளிகளை பேணிக்காப்பதையும், அவற்றை மேம்படுத்துவதையும் நமக்கான பொறுப்பாக எடுப்போம். அடுத்த தலைமுறையினருக்கான நம்பிக்கையாகவும், வழிகாட்டியாகவும் இருப்போம். நம் பள்ளி, நம் பெருமை என்பதனை நம் கடமையாக முன்னெடுத்து செயல்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்..