திருச்சி மாவட்டத்தில் உள்ள கார்த்திகை பட்டி கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரு வானில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் நேற்று காலை 6 மணிக்கு மாசிலா அருவிக்கு சென்றனர். அந்த அருவியில் நீர்வரத்து குறைவாக இருந்தது. இதனால் அருவியின் நீர் வழிப்பாதையான எரச நாடிப்பட்டிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது குணால்(22) என்பவர் நிலைதடுமாறி 50 அடி பள்ளத்தில் அருவி பகுதியில் தவறி விழுந்துவிட்டார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளத்தில் கிடந்த குணாலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குணால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.