மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிங்கனோடை மெயின் ரோடு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு நேற்று காலை புதுமனை புகுவிழா நடக்க இருந்தது. நேற்று அதிகாலை வீட்டின் அருகே இருக்கும் பிள்ளையார் கோவிலில் இருந்து உறவினர்கள் சீர்வரிசை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்து வந்தனர். அப்போது காரைக்கால் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்றவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயா(55), அபிநயா(37), சித்ரா(55), தனலட்சுமி(65), அபிராமி சுந்தரம்(70), சண்முகப்பிரியா(29) ஆகிய ஆறு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஐந்து பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.