சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை குறிஞ்சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஷ்வரன்(19) என்ற மகன் இருந்துள்ளார். சி.பி.எஸ்.இ பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த ஜெகதீஸ்வரன் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். கடந்த இரண்டு வருடம் ஆக ஜெகதீஸ்வரன் நீட் தேர்வு எழுதினார். ஆனால் இரண்டு முறையும் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் மூன்றாவது முறையாக தேர்வு எழுதி அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்குவேன் என ஜெகதீஸ்வரன் தனது தந்தையிடம் நம்பிக்கையோடு தெரிவித்ததாக தெரிகிறது. இதற்காக நீட் பயிற்சி மையத்திற்கு ஆன்லைனில் பணமும் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஜெகதீஸ்வரனுடன் நீட் பயிற்சி மையத்தில் படித்த சில மாணவர்கள் 450 மதிப்பெண்கள் பெற்றும், அரசு ஒதுக்கீடு கிடைக்காததால் இன்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுத்தனர். மேலும் 2 பேர் தனியார் கல்லூரியில் அதிக பணம் கட்டி நிர்வாக ஒதுக்கீடு சீட் பெற்று எம்.பி.பி.எஸ் சேர்ந்தனர். நண்பர்கள் யாரும் தன்னுடன் மீண்டும் தேர்வு எழுதப்போவதில்லை என ஜெகதீஸ்வரன் மனக்குழப்பத்தில் இருந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெகதீஸ்வரன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.