மொழிப்போர் தியாகி திரு.வேணுகோபால் அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி.

முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தாய்த்தமிழைக் காக்கும் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மொழிப்போர் தியாகி திரு. வேணுகோபால் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

இன – மான – மொழியுணர்வோடு திராவிட இயக்கப் பட்டறையில் வார்ப்பிக்கப்பட்ட கொள்கை தீரரான வேணுகோபால் அவர்கள் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றியவர். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பெற்ற பெருமைக்குரியவர்.

வேணுகோபால் அவர்கள் 40 ஆண்டுகள் மாவட்ட அவை தலைவராக இருந்தவர். 2019 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் தந்தை பெரியார் விருதை அவருக்கு வழங்கி மகிழ்ந்த தருணத்தை தற்போது எண்ணிப் பார்த்து நெகிழ்கிறேன்.

அன்னைத் தமிழ் காக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்ற ஆற்றல்மிகு செயல்வீரரான, அனைவரது நன்மதிப்பை பெற்ற மக்கள் தொண்டரான திரு. வேணுகோபால் அவர்களின் மறைவு கழகத்துக்கும் திருவண்ணாமலை மக்களுக்கும் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.