அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் அன்புதுரை (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரை சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமான நிலையில் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அன்பு துரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி பச்சிளம் குழந்தையை காணவில்லை என சிறுமியின் தாயார் மீன்சுருட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர்களுக்கு சிறுமியின் தாயார் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தாய் மகள் இருவரையும் போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தியதில் பச்சிளம் குழந்தையை கொன்று ஏரிக்கரையில் புதைத்தது தெரிய வந்தது. அவர்கள் துர்நாற்றம் வீசக்கூடாது என்பதற்காக புதைத்த இடத்தில் வாசனை திரவியங்களை பூசியுள்ளனர். இதைத்தொடர்ந்து குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தாய்-மகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.