திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 22ஆம் தேதி உகாதி(தெலுங்கு வருடப்பிறப்பு) ஆஸ்தானம் நடைபெற உள்ளது. உகாதி தினத்தை முன்னிட்டு கோவிலில் வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்ச் 21ஆம் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மார்ச் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.