சமூக வலைத்தளங்களில் ஆச்சரியம், சிந்தனை, கோபம் எனப் பல உணர்வுகளைத் தூண்டும் காணொளிகள் வெளியாவது வழக்கம். அப்படி சமீபத்தில் ‘எக்ஸ்’ தளத்தில் (முன்னர் ட்விட்டர்) வெளியான ஒரு காணொளி, பார்ப்பவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில் ஒரு வயதான பெரியவரை மற்றொரு நபர் பிடித்துக்கொண்டு, அவரைத் தாக்குவதுபோல நடிக்கிறார்.

இந்தக் காட்சியைச் சற்று தூரத்தில் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெரியவரின் எருமை மாடு, தனது உரிமையாளரைக் காப்பாற்றுவதற்காக உடனே ஓடி வருகிறது. பாசத்துடனும் ஆக்ரோஷத்துடனும் வந்த மாடு நெருங்கி வந்ததும், தாக்குவதுபோல நடித்த நபர் பெரியவரை விட்டுவிட்டு, அங்கிருந்து உடனே தப்பிச் சென்றுவிடுகிறார்.​மாடு நெருங்கி வந்தபின், பெரியவர் அந்த எருமை மாட்டை அருகில் அழைத்து அதன் தலையைத் தடவிக் கொடுத்து, பாசத்துடன் சமாதானம் செய்கிறார்.

இந்த அற்புதமான பாசப் பிணைப்பைக் காட்டும் காணொளி இணையத்தில் மிக வேகமாகப் பரவியது. இதைப் பார்த்த பலரும் ஆச்சர்யம் அடைந்தனர். மனிதர்களைப் போலவே மிருகங்களுக்கும் பாசமும் நன்றியுணர்வும் உண்டு என்பதை இந்தச் சம்பவம் நிரூபிப்பதாகப் பல நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து, அந்த எருமை மாட்டின் பாசத்தையும் துணிச்சலையும் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.