சேலம் மாவட்டம் பள்ளபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் கள்ளக்குறிச்சி நோக்கி சொகுசு கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அதிகாலை வேளையில் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இவர்களது கார் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மற்றும் நண்பர்கள் விரைந்து காரை விட்டு இறங்கி உயிர் தப்பினர். காரில் பற்றி கொண்டிருந்த நெருப்பினால் எஞ்சின் வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதியில் யாரும் செல்லவில்லை.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். கார் எப்படி எரிந்தது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.