ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருபவர்கள் அருண்பாகத் – சாந்தினி தம்பதி. பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதிக்கு மனிஷா குமாரி என்ற மகளும் சோன்பி குமாரி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் இருந்தது. இதில் மனிஷா குமாரி பள்ளிக்கு சென்று விட ஒன்றரை வயது குழந்தை மற்றும் சாந்தினி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் சாந்தினி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் குழந்தை சோன்பி குமாரி விளையாடிக் கொண்டிருந்தது. திடீரென தூக்கத்தில் இருந்து விழித்த சாந்தினி குழந்தையை காணாமல் தேடி உள்ளார். அப்போது வீட்டிற்கு பின்னால் வந்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் பின்னால் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வாலிக்குள் குழந்தை தலைகீழாக முங்கிய நிலையில் கிடந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சித்தோடு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.