ஹிமாச்சல் பிரதேசத்தின் உனா மாவட்டம், ஹரோலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று ஒரு சிறுத்தை நுழைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென சிறுத்தை கிராமத்துக்குள் நுழைந்ததை கண்ட மக்கள் பயத்தில் ஓடத் தொடங்கினர். அதே சமயம், சிறுத்தை சிலரைத் தாக்கி காயப்படுத்தியது. இதையடுத்து மக்கள் கற்கள், குச்சிகள் எடுத்துக் கொண்டு அதனை விரட்டினர்.

 

மக்கள் கூட்டமாக தாக்க முயன்றதை அஞ்சி சிறுத்தை அங்கிருந்து ஓடிப்போனது. ஆனால், இத்தனை பெரிய சம்பவம் நடந்தபோதிலும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்திற்கான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல நெட்டிசன்கள், மனிதர்கள் காடுகளை ஆக்கிரமிப்பதால்தான் விலங்குகள் கிராமங்கள், நகரங்கள் நோக்கி வரத் தொடங்கியுள்ளன,”
என கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் கிராமப்புறங்களிலும் வீடுகளுக்குள்ளும் நுழைவது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் இவ்விலங்குகளின் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கவும், பலர் கடுமையாக காயமடையவும் நேர்ந்துள்ளது. மேலும் வனவிலங்குகளின் வாழ்விடங்கள் குறைந்து வருவது, மனித ஆக்கிரமிப்புகள் அதிகரித்தது, மற்றும் மாடுகள் போன்ற எளிய இரைகள் கிராமங்களில் கிடைப்பது ஆகிய காரணங்களால் சிறுத்தைகள் மனிதக் குடியிருப்புகளுக்கு அடிக்கடி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.