கோடை காலம் தொடங்கியதுமே குளிர்ச்சியானவற்றை சாப்பிட மக்கள் விரும்புவார்கள். வெயிலுக்கு இதமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். இதில் ஒரு பீஸ் 20 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் ஏழை மக்கள் கூட இதனை வாங்குகின்றனர். இந்த நிலையில் தர்பூசணி பழத்தில் கலப்படம் கலப்பதாக சோதனையில் தெரியவந்துள்ளது.

அதாவது பழம் சிவப்பு நிறமாக இருக்க வேண்டும் என்பதற்காக ரசாயனத்தை கலக்கின்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறுகையில், விற்பனையாளர்கள் தர்பூசணி துண்டுகளையும் கலர்பொடியை  சர்க்கரை பாகுவில் கலந்து பூசுவதை பார்க்க முடிந்ததாக தெரிவித்துள்ளார். இயற்கையான சுவையை மாற்றி அமைக்கும் உணவில் தேவையற்ற சர்க்கரையை சேர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.