திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார். இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு உற்சாகமாக நடனம் ஆடினர்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஞ்சித் இளம் தலைமுறையினர் சினிமா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் பாரம்பரியமான கலையை மீட்டெடுக்க முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார். மேலும் இதே போன்ற பாரம்பரிய கலையினை மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு தமிழக அரசு உதவ முன் வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.