2020 – 2021 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.4,223 கோடி வழங்க தமிழக அரசு கோரி உள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என கூறியுள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது, எந்த மாநிலத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீட்டை விடுவிக்க வேண்டும் என ஜி எஸ் டி கவுன்சில் தான் முடிவு செய்கிறது. மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீடு கோரினால் அதற்கான சான்றை அந்த மாநிலங்களில் கணக்காய்வு தலைவர்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த சான்றுடன் தேவையான ஆவணங்கள் கிடைத்தவுடன் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும் ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு சட்டப்படி கணக்காய்வு தலைவர் சான்றளிப்பது கட்டாயமாகும். இது மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறை அதேபோல் கணக்காய்வு தலைவர் சான்றிதழ் தாமதம் ஏற்பட்டால் அது சம்பந்தப்பட்ட மாநில அரசு மற்றும் கணக்காய்வு தலைவர் இடையேயான பிரச்சனையாகும். அதற்கு அந்த இரு தரப்பும் தான் தீர்வு காண வேண்டும். இந்நிலையில் கணக்காய்வு தலைவர்களின் சான்று கிடைக்காததால் சில மாதங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவது தாமதம் ஆகிறது. கடந்த 2017 – 2018 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அந்த சான்றை கேரளா சமர்ப்பிக்கவில்லை.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2017 – 2018 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைவர் சான்று சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இழப்பீடு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக தமிழ்நாட்டுக்கு சுமார் ரூ.4,223 கோடி வழங்க வேண்டும் என கணக்காய்வு தலைவர் சான்றளித்துள்ளார். அதில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இழப்பீடு தொகையை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்படும் அனைத்து மாநிலங்களுக்கும் இடையேயான ஜிஎஸ்டி இழப்பீடாக மொத்தம் ரூ.86 ஆயிரத்து 912 கோடி வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.