மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்த 18 வயது கல்லூரி மாணவி ஸ்வேதா மகாதிக், தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதான ஷேக் அக்தர் நவாஸ் என்பவர், விதிகளை மீறி பெண்கள் மட்டும் பயணிக்கும் (Ladies Compartment) பெட்டியில் ஏறியுள்ளார். இதனை அங்கிருந்த ஸ்வேதா தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், ஓடும் ரயிலில் இருந்து ஸ்வேதாவை வெளியே தள்ளிவிட்டுள்ளார். தண்டவாளத்தில் விழுந்த ஸ்வேதா பலத்த காயமடைந்து தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட ஷேக் அக்தர் நவாஸை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு மாணவியின் துணிச்சலான கேள்விக்கு, மரணத்தைத் தரும் அளவுக்கு வன்முறையைக் கையாண்ட அந்த நபரின் செயல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “பெண்கள் பெட்டியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?” என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.