திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் “பண்ணிடுவோம்” என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் . தன்னைப் பின் தொடர்பவர்கள் கமெண்ட் பதிவிடுவதை அவர் செய்து முடிப்பார்.  இதனை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. அதாவது அந்த இளைஞர் சைக்கிளில் வாழைப்பழம்,  ஊதுபத்தி ஆகியவற்றை சொருகிவிட்டு பிணம் போல மேக்கப் போட்டு சாலையில் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார்.

இதை பார்த்த பலரும் என்ன கொடுமை இது? என்று தலையில் அடித்துக் கொண்டு சென்றுள்ளனர். இதனையும் அந்த இளைஞர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும் பொது இடங்களில் இப்படியா செய்வது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர் . மேலும் திறமை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் இதுபோன்று அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.