சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கடந்த வாரம் மலேசியாவில் இருந்து ஒரு தம்பதி ஆன்மீக சுற்றுலா வந்தனர். அந்த தம்பதியினர் குடியுரிமை சோதனை முடிந்ததும் உடைமைகளை எடுக்க சுங்க பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் நீங்கள் இந்திய சுங்க விதிகளின்படி இல்லாமல், கூடுதல் நகைகளை அணிந்திருக்கிறீர்கள், அவற்றை கழற்றி தாருங்கள் என கூறியுள்ளனர்.

அதற்கு அந்த பெண் நான் தாலி அணிந்து இருக்கிறேன் அதனை கழற்றி தர முடியாது என அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவரது கணவரின் நகைகளை வாங்கிக் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் மலேசியாவுக்கு திரும்பி செல்லும் போது நகைகளை வாங்கிக் கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த பெண் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் கணவருடன் மலேசியாவில் இருந்து திருப்பதி, திருத்தணி உள்ளிட்ட கோவில்களுக்கு செல்ல சென்னை வந்துள்ளேன். சுமார் 2:30 மணி நேரம் சுங்க இலாகா அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் எங்களை அலைக்கழித்ததோடு, எனது கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்ற சொன்னார்கள். நான் வாக்குவாதம் செய்ததால் எனது கணவரின் நகைகளை வாங்கிக் கொண்டனர்.

எவ்வளவு நகைகள் கொண்டு வர வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது என அந்தப் பெண் வீடியோவில் கூறியுள்ளார். இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரிகள் கூறியதாவது, சுங்க விதிகளின்படி அளவுக்கு அதிகமான நகைகளை அணிந்து வந்தால் உரிய அனுமதி அறிக்கையை கொடுக்க வேண்டும். அது இல்லாததால் கூடுதலான நகைகளை வாங்கி வைத்துக்கொண்டு திரும்பி செல்லும் போது வாங்கி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவித்தனர்.