இமாச்சலப் பிரதேசத்தின் ரோஹ்தாங் கணவாய் மற்றும் அதனையொட்டியுள்ள கிராம்பூ ஸ்னோ பாயிண்ட் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் டெல்லி போன்ற பெருநகரங்களில் நிலவும் கடும் காற்று மாசுபாட்டிலிருந்து தப்பிக்கவும், வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மலைப்பகுதிகளுக்குப் படையெடுத்து வருகின்றனர்.

“>

மேலும் முறையான வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததாலும், குறுகிய சாலைகளின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதாலும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அமைதியைத் தேடிச் சென்ற பயணிகளுக்கு, அங்கு நிலவும் நெரிசலும் புகையும் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளன.

இந்தத் திடீர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த லாகூல்-ஸ்பிதி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ரோஹ்தாங் மற்றும் ஷிங்குலா கணவாய்களுக்கு தற்போது 4×4 ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், மற்ற வாகனங்கள் அனைத்தும் கிராம்பூ பகுதியிலேயே நிறுத்தப்படுகின்றன.

இதுவே கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்தைச் சீர்செய்யவும் கூடுதல் போலீஸ் படை மற்றும் நவீன மின்சார வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து விதிகளை மதித்து, ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.