உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தின் சையத்பூர் பகுதியில், மின்சார வாரியத்தின் கெடுபிடிகளால் மனமுடைந்த சுரேந்திர காஷ்யப் என்ற ஏழை பான் கடை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சாலையோரம் சிறிய கடை நடத்தி வந்த இவரது கடையில், கடந்த ஆண்டு மின்சாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சுமார் 1.12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்தத் தொகை பின்னர் வட்டியுடன் சேர்ந்து 1.85 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதனால் ஒரு சாதாரண ஏழை வியாபாரியால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத இந்த பெரும் தொகையைச் செலுத்தக் கோரி, மின்சார வாரிய அதிகாரிகளும் வருவாய்த் துறையினரும் அவருக்குத் தொடர்ந்து கடுமையான மன உளைச்சலையும் மிரட்டல்களையும் கொடுத்து வந்துள்ளனர்.

இந்த அநியாயமான மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரி சுரேந்திர காஷ்யப் பல்வேறு அரசு அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்தும், அவருக்கு எந்த ஒரு நீதியோ அல்லது நிம்மதியோ கிடைக்கவில்லை. மாறாக, அதிகாரிகள் அவரது கடையை மூடிவிடுவதாக மிரட்டி, பணத்தை வசூலிக்கத் தீவிர அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் அதிகாரிகளின் இந்த தொடர் தொல்லைகளையும், கடுமையான மன அழுத்தத்தையும் தாங்க முடியாமல், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக ஒரு உருக்கமான கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார்.

இதனால் அரசுத் துறைகளின் அலட்சியப் போக்கும், மனிதாபிமானமற்ற அணுகுமுறையும் எவ்வாறு ஒரு ஏழை மனிதனின் உயிரைப் பறித்துள்ளது என்பதை இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளதுடன், ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் மீதும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.