தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்த சரத்பாபு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்தார். சில வாரங்களுக்கு முன் சரத்பாபுவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உள் உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் சரத்பாபு உடல்நிலை பற்றி வதந்தி பரவியது. இதனை அவரது குடும்பத்தினர் மறுத்ததோடு தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரத்பாபுவுக்கு செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையானது கவலைக்கிடமாக இருக்கிறது. அதே சமயம் உடல்நிலை சீராகவும் உள்ளது. எனவே யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.