கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் 40 வயது பெண் பீளமேடு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் நான் கோவை அவிநாசி சாலை ஹோப் காலேஜ் அருகே இருக்கும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை வேலை பார்த்தேன். எனக்கு மாத சம்பளமாக 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து தனிப்பட்ட காரணங்கள் இருந்ததால் வேலையில் இருந்து நின்று விட்டேன். அந்த தனியார் நிறுவனத்தினர் எனக்கு நான்கு மாத சம்பள பாக்கி தராமல் இருந்தனர். இதுகுறித்து தொடர்ந்து கேட்டு வந்தேன்.

ஆனால் அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களான சுதாகர் மற்றும் சின்ன காளி ஆகியோர் சம்பள பணம் வேண்டும் என்றால் ஆசைக்கு இணங்குமாறு பாலியல் தொந்தரவு அளித்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் என்னை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சம்பள பாக்கியை வாங்கி தர வேண்டும் என இளம்பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன் பெயரில் சுதாகர், சின்ன காளி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.