கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரைச் சேர்ந்த குமார் என்பவர் திருச்சி ரோடு ஐயர் லேஅவுட் அருகே கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சக்திவேல் என்பவர் மேலாளராகவும், ரம்யா, ஜெயக்குமார், சுபலட்சுமி ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்யும் பணியையும் மேற்கொண்டு வந்தனர். மேற்கூறிய நான்கு பேரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கிய பணத்தை சக்திவேலின் மனைவி அகிலாண்டேஸ்வரியின் வங்கி கணக்கில் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதுவரை அவர்கள் 25 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில் சக்திவேல் உள்ளிட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல குமாரின் தந்தை முத்துசாமி நடத்தி வந்த கிரைண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் அங்கு வேலை பார்த்த நான்கு ஊழியர்கள் 50 லட்ச ரூபாய் மோசடி செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.