சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருணா நகரில் செந்தில் முருகப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015 -ஆம் ஆண்டு இவர் மதுரையில் உள்ள ஒரு  கார் ஷோரூமில் சொகுசு கார் ஒன்றை 40 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த கார் வாங்கிய 10 நாட்களிலேயே பழுதானதை தொடர்ந்து கார் ஷோரூமிற்கு சென்று அதனை பழுது நீக்கி தருமாறு செந்தில் கூறியுள்ளார். அதன் பேரில் காரை சரி செய்து கொடுத்து இருக்கின்றனர். ஆனால் மீண்டும் சில நாட்களில் அதே காரில் அதேபோல் பழுது ஏற்பட்டுள்ளது.

இதனை  சரி செய்து தரும்படி பலமுறை முறையிட்டும் அதனை சரி செய்து கொடுக்கவில்லையாம். இதன் காரணமாக சிவகங்கையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் நிறுவன சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூபாய் 16 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த நுகர்வோர் கோர்ட் தலைவர் பாலசுப்பிரமணியன் உறுப்பினர்கள் குட்வின், சாலமோன் ராஜ்,  கார் நிறுவனமும், விற்பனை ஷோரூம் நிறுவனத்தினரும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ 5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். அதேபோல் அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக  ரூ.2 லட்சத்தை உரிய வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.