தமிழ் திரையுலகில் முன்னனி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா உட்பட பல்வேறு வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அத்துடன் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். சென்ற 2014-ஆம் வருடம் கார்த்தி, சமந்தா நடிப்பதாக இருந்த “எண்ணி 7 நாள்” எனும் திரைப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கயிருந்தது. இதற்காக பி.வி.பி கேபிட்டல்ஸ் எனும் நிறுவனத்திடமிருந்து லிங்குசாமியும், அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோசும் கடன் பெற்றதாக சொல்லப்படுகிறது.

அக்கடன் தொகையை திருப்பி செலுத்த லிங்குசாமி தரப்பு காசோலை கொடுத்ததாகவும், அதை வங்கியில் செலுத்தியபோது பணமில்லை என திரும்பி வந்ததாகவும் கூறி பி.வி.பி. கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் போன்றோருக்கு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் போன்றோர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் காசோலை மோசடி வழக்கில் டைரக்டர் லிங்குசாமியின் 6 மாத தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் ரூ.1.35 கோடியை திருப்பி செலுத்த 6 வாரங்கள் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.