கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை முதல் தொடர்ந்து  கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனிடையே கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். எனவே தேங்கிய இடங்களில் உள்ள மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காஞ்சிபுரம், சென்னை ஆகிய 2  மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (30.11.2023) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.