உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள கிஸ்ருவா கிராமத்தில், யாரும் எதிர்பாராத ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள மூசாஜாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 50 அடி உயரம் கொண்ட கட்டுமானத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டியின் மீது தெருவில் சுற்றித் திரிந்த காளை மாடு ஒன்று திடீரென ஏறியுள்ளது.

மேலும் பசியின் காரணமாக உணவைத் தேடி அலைந்த அந்த மாடு, தொட்டியின் படிக்கட்டுகள் வழியாக மேலே ஏறியதாகக் கூறப்படுகிறது. உயரமான தொட்டியின் உச்சியில் மாடு நிற்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, அங்கு பெருமளவில் கூடத் தொடங்கினர். இந்த அசாதாரணக் காட்சியைக் கிராம மக்கள் தங்களது கைபேசிகளில் வீடியோவாகப் பதிவு செய்ய, அது தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

“>

இதனால் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசரக்கால போலீஸாரும் உள்ளூர் மக்களும் இணைந்து, அந்த மாட்டைப் பத்திரமாக கீழே இறக்குவதற்கான மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தத் தண்ணீர் தொட்டியின் மேல் தத்தளித்துக் கொண்டிருந்த மாடு, ஒருகட்டத்தில் கீழே இறங்க முயன்றபோது துரதிர்ஷ்டவசமாகத் தனது சமநிலையை இழந்தது.

இதனால் சுமார் 40 அடி உயரத்திலிருந்து அது நிலத்தில் பயங்கரமாக விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தத் தண்ணீர் தொட்டியின் கட்டுமானப் பணிகள் முழுமையடையாமல் இருப்பதும், பாதுகாப்புக் குறைபாட்டால் அதன் படிக்கட்டுப் பகுதி மூடப்படாமல் இருந்ததே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணம் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.