நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கரையங்காடு பட்டி கிராமத்தில் காளி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையல்காரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று காலை காளி அடர்ந்த காடுகள் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த கரடி காளியின் மீது பாய்ந்து கடித்து குதறியதால் அவர் படுகாயம் அடைந்தார்.

இதேபோல தோட்ட வேலைக்கு நடந்து சென்ற பழனிச்சாமி என்பவரையும் கரடி தாக்கியது. இதில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கரடியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.