சண்டிகரின் பாபு தாம் காலனி பகுதியில், குட்டி நாய் ஒன்று எரியும் தந்தூரி அடுப்பில் வீசிக் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் விலங்கு நல ஆர்வலர்களிடமும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 15-ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1:40 மணியளவில், செக்டார்-26 காய்கறி சந்தையில் தொழிலாளியாக வேலை செய்யும் சஞ்சய் குமார் என்பவர் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கொடூரத்தைக் கண்ணால் கண்டுள்ளார்.

பாபு தாம் காலனியில் உள்ள நூரானி தாபா உணவகத்தின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தான் கையில் வைத்திருந்த நாய் குட்டியை திடீரென அங்கு எரிந்து கொண்டிருந்த தந்தூரி அடுப்பிற்குள் தூக்கி வீசிவிட்டு தப்பியோடியதாக சஞ்சய் குமார் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சஞ்சய் குமார், உடனடியாக அடுப்பிற்கு அருகே ஓடிச்சென்று கடும் போராட்டத்திற்குப் பிறகு அந்த நாய் குட்டியை வெளியே இழுத்துள்ளார். ஆனால், அதற்குள் அந்தப் பரிதாப ஜீவன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

“>

 

அதன் பிறகு, சஞ்சய் குமார் அந்த நாய் குட்டியின் உடலை அருகில் உள்ள பகுதியில் அடக்கம் செய்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள செக்டார் 26 காவல் நிலைய போலீஸார், விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய அந்த இரக்கமற்ற நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.