நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த வேளையில், மைதானத்திற்கு வெளியே நேரலையில் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த கார்ஹி ராவத் என்ற பெண் செய்தியாளரிடம் ஒரு நபர் மிக அநாகரீகமாக நடந்துகொண்டார். கூட்டமாக மக்கள் வெளியேறிக் கொண்டிருந்த போது, அந்த நபர் கார்ஹியை உரசிவிட்டுச் சென்றது கேமராவிலேயே தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த கார்ஹி, சற்றும் தயங்காமல் அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

​”என் மீது தவறாகக் கை வைத்தால் உன் முகத்தை இணையத்தில் போட்டு அசிங்கப்படுத்துவேன்” என அவர் துணிச்சலாகத் தனது பதிவில் குறிப்பிட்டதுடன், காவல்துறையினரையும் டேக் செய்துள்ளார். இந்தியாவே பெருமைப்படும் ஒரு தருணத்தில் இப்படியொரு இழிவான செயல் நடந்திருப்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த நபரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதம் மீண்டும் ஒருமுறை சூடுபிடித்துள்ளது.