அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 28 வயது உடைய ஹெல்த் புஸ்தாமி எனும் இளம்பெண் ஒருவர் விமான நிலைய உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் செலுத்தாமல் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உணவகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய பெண்ணை கைது செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இந்நிலையில் சோதனை சாவடி ஒன்றில் அந்த இளம் பெண் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அவரை சுற்றி வளைத்த போலீசார்  கைது செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த பெண் அதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து ஒரு வழியாக போலீசார் புஸ்தாமியை  கைது செய்துள்ளனர். அப்போது புஸ்தாமி போலீஸ்சாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் போலீசார் தன்னை கைது செய்தால் அவர்கள் மீது எச்சில் துப்புவேன் என மிரட்டியதாகவும் வழக்குப்பதிவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து புஸ்தாமி கூறியதாவது, “என்னைவிட அழகான பெண்களை இதுவரை போலீசார் பார்த்ததில்லை என்ற காரணத்தினால் அவர்கள் என்னை கைது செய்து துன்புறுத்தியுள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதேசமயம் காவல்துறையினர் மோசமான பாலியல் குணம் படைத்தவர்கள் எனவும் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சி செய்ததாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இவர் மீது ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.”