தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்து உள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் ” மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால் குனிய மாட்டோம், நிமிர்ந்துதான் நிற்போம். திமுகவை பற்றி தெரியவில்லை எனில் டெல்லியில் உள்ள மூத்த தலைவர்களைக் கேட்டுப் பாருங்கள். நாங்கள் கொள்கைக்காகக் கட்சி நடத்துகிறோம். தங்களுக்கு என்று தனி அரசியல் கொள்கை, கோட்பாடுகள் இருக்கிறது.

ஊழல் குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. அனைத்து ஆதாரங்களையும் தருகிறோம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தத் தயாரா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.