கடலூர் மாவட்டத்தில் உள்ள காவனூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுதந்திர தேவி(15) தென்னூரில் இருக்கும் லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை பாட்டி ஊரான மருதூரில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை பார்ப்பதற்காக சுதந்திர தேவி சென்றுள்ளார். பின்னர் கும்பாபிஷேகம் முடிந்ததும் சுதந்திரதேவி தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மருதூர் ஊராட்சி மன்ற அலுவலக வாசல் மேற்பகுதியில் இருந்த சிமெண்ட் ஸ்லாப் உடைந்து சுதந்திர தேவி மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, சிமெண்ட் விழுந்து படுகாயமடைந்த மாணவி வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு வருத்தம் அடைந்தேன். உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறப்பட்டுள்ளது.