கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுங்கம் பைபாஸ் ரோடு தியாகி சிவராம் நகரில் லோகநாதன்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தெய்வானை(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இதில் தெய்வானை அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். மேலும் சில ஆடுகளை வளர்த்து வருகிறார். கணவன் மனைவி இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.

பின்னர் போதை தலைக்கேறியதால் லோகநாதன் தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த தெய்வானை உருட்டு கட்டையால் தனது கணவரின் தலையில் ஓங்கி அடித்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லோகநாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தெய்வானையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.