கடலூர் மாவட்டத்தில் உள்ள திருமலை அகரம் கிராமத்தில் விஸ்வலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான காயத்ரி(25) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு காயத்ரிக்கு வீரமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு தேஜஸ்வரன் என்ற 1 1/2 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. காயத்திரியின் பெற்றோர் திருமணத்தின் போது 15 பவுன் தங்க நகை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கொடுத்தனர்.

தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் வீரமணி திருமணத்திற்கு பிறகு வீடு கட்டி விடுவேன் என தனது மனைவி குடும்பத்தாரிடம் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் வீடு கட்டி தருமாறு காயத்ரி கேட்டதற்கு வீரமணி உனது தந்தையிடம் போய் பணம் வாங்கி வந்தால் வீடு கட்டி தருகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் வீரமணி அவரது தாய் பட்டத்தாள், தந்தை அருள்மணி, அண்ணன் வேலுமணி ஆகியோர் இணைந்து காயத்ரியின் தாலியை பிடுங்கிக் கொண்டு வீரமணிக்கு வேறு திருமணம் செய்து கொள்கிறோம் என கூறி அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இதனைத் தொடர்ந்து தாலியை தருமாறு கேட்டதற்கு வீரமணி உள்ளிட்ட 4 பேரும் காயத்ரியை தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த காயத்ரி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வீரமணி உள்பட 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.