சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் பிரசன்ன குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வண்ணாரப்பேட்டையில் மிட்டாய் கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பிரசன்னகுமாருக்கு அவரது நண்பர் மூலம் தண்டையார்பேட்டை சேர்ந்த சுஜாதா(40), அவரது மகன் ரிஸ்வான்(23) ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள் குறும்படம் எடுத்து ஓடிடி தளத்தில் வெளியிட்டு நிறைய பணம் சம்பாதிக்கலாம் என பிரசன்னகுமாரிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

இதனை நம்பி பிரசன்ன குமார் குறும்படம் எடுப்பதற்காக 15 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தை தாய், மகன் இருவரும் வாங்கிக்கொண்டனர். ஆனால் குறும்படம் எடுக்காமல் பணத்தையும் திரும்ப கொடுக்காமல் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து பிரசன்ன குமார் வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுஜாதாவை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் அவரது மகன் ரிஸ்வானை போலீசார் தேடி வருகின்றனர்.