டூம்ஸ்டே கடிகாரம் கடந்த 1947 -ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது. உலகில் நடக்கும் பருவநிலை மாற்றம், அணு ஆயுத ஆபத்து, போர் போன்ற பல்வேறு விவகாரங்களை வைத்து இந்த கடிகாரத்தின் நேரத்தினை விஞ்ஞானிகள் மாற்றி அமைக்கின்றனர். அந்த வகையில் நள்ளிரவு 12 மணியை இந்த கடிகாரம் தொட்டுவிட்டால் உலகம் அழிந்து விடும் என்பது நம்பிக்கையாகும். இந்த உலக அளவிற்கான அபாயம் இருக்கும் நேரத்தில் கடிகாரத்தின் முள்ளானது 12 மணிக்கு அருகில் கொண்டு செல்லப்படும். இதற்கு முன்பாக கடந்த 2016 -ஆம் வருடம் இந்த கடிகாரம் 12 மணி ஆக மூன்று நிமிடத்தில் இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த கடிகாரத்தின் நேரம் உக்ரைன், ரஷ்யா போர், கொரோனா பரவல், பருவநிலை நெருக்கடி போன்ற காரணங்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 12 மணிக்கு இன்னும் 90 வினாடிகள் மீதம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் கடிகாரத்தின் நிமிடங்கள் குறைந்து கொண்டே வருவது இந்த உலகிற்கு நல்லதல்ல எனவும் அனைத்து நாடுகளும் இதனை உணர்ந்து மனித குலத்தின் நலனுக்காகவும் சுற்றுச்சூழல் நலனுக்காகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும்  விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.