சர்ச்சைக்குரிய அமெரிக்கத் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசியக் கோப்புகள் வெளியாகி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு, 2019-ல் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்ட ஜெப்ரி எப்ஸ்டீனின் வாடிக்கையாளர் பட்டியலில் பில் கேட்ஸின் பெயர் இடம் பெற்றிருந்தது. அண்மையில் வெளியான ‘எப்ஸ்டீன் கோப்புகளில்’, பில் கேட்ஸ் ரஷியப் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததும், அதனால் ஏற்பட்ட நோய்க்கு ரகசியமாகச் சிகிச்சை பெற்றதும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தனது அறக்கட்டளை ஊழியர்களிடையே பேசிய பில் கேட்ஸ், ரஷியப் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டதோடு, எப்ஸ்டீனுடன் நட்பு கொண்டது தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பில் கேட்ஸின் இந்த ஒப்புதல் குறித்த செய்தியைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பயனர் ஒருவர், “டெஸ்லா பங்குகளை வீழ்த்த நினைப்பவர்கள் நல்லவர்கள் அல்ல” என்று பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், “கர்மா உண்மையானது” (Karma is real) என்று பதிவிட்டுள்ளார்.

மஸ்க் இவ்வாறு பதிலளிக்க ஒரு முக்கியக் காரணம் உள்ளது. எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடையும் என சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,150 கோடி) தொகையைப் பில் கேட்ஸ் ‘ஷார்ட் செல்லிங்’  முறையில் பந்தயம் கட்டியிருந்தார். கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தப் பந்தயத்தைத் தொடர்ந்து வைத்திருக்கும் பில் கேட்ஸ், டெஸ்லா நிறுவனம் மதிப்புமிக்கதாக மாறினால் திவாலாவது உறுதி என மஸ்க் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

தற்போது உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்க, பில் கேட்ஸ் முதல் 10 இடங்களுக்குள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், அண்மையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் எலான் மஸ்க்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது