தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தேசிய பேரிடராக அறிவிப்பதற்கான நடைமுறைகள் தற்போது இல்லை, மாநில பேரிடராக மாநில அரசு அறிவித்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும் எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மாநில பேரிடர் நிதியை தந்துவிட்டு தேசிய பேரிடர் நிதியை கொடுத்தது போல பேச வேண்டாம்.

நாங்கள் மரியாதை தருவதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை செலுத்தி நிதியை தாருங்கள் மரியாதைக்குரிய நிதி அமைச்சரே என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். மேலும் யாரிடம் எப்படி பேச வேண்டும் என பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மரியாதைக்குரிய அப்பா வீட்டு பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல – சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.

வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், “நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ” என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்” என்று கூறினேன். என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள்.

அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள். மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.

வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே!” என பதிவிட்டுள்ளார்..