தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடந்த 26-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 6-வது நாளாக நீடித்த போராட்டத்தில் கல்குவாரிகள் மீது தனி நபர்கள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கூடாது;

சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படும் நபர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சிறு கனிமங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்பதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சதாசிவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரோட்டில் 100-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய கல்குவாரிகள் அமைந்துள்ளது. தற்போது வேலை நிறுத்தம் காரணமாக எம்.சாண்ட், ஜல்லி கற்கள், குவாரி துகள்கள் உள்ளிட்டவற்றை ஏற்றி செல்லும் லாரிகள் ஓடவில்லை.

இதனால் கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வீடு, தொழிற்சாலை, கட்டிடம் ஆகியவை கட்டும் பணி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற ஆடி மாதம் 18-ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும்.

ஆனால் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டதால் தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சுமார் 10,000 மேற்பட்ட ஈரோட்டை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். எனவே தமிழக அரசு குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.